Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வழக்கமான உற்சாகத்தில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இருக்குமா?

ஆகஸ்டு 02, 2019 05:09

தமிழகத்தில் ஆடிப்பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. எனினும் தற்போது காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், இந்தாண்டு ஆடிப்பெருக்கின் போது வழக்கமான உற்சாகம் காணப்படுமா என்பது சந்தேகமே.

இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.....

கும்பகோணத்தில் காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப் பெருக்கு.. விவசாயத்தை காக்கும் அன்னையாக காவிரித் தாய் விளங்குவதால் காவிரி அன்னையை போற்றும் வகையிலும், அன்றைய தினம் மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து புது மணத் தம்பதிகள் அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இந்த ஆடிப்பண்டிகை டெல்டா மாவட்டங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்படும்.

காவிரி ஆற்றில் காப்பரிசி, காதோலை கருகமணி, பழங்கள் வைத்து தீப, தூப ஆராதனை காண்பித்து அதனை இலையில் வைத்து நீரில் விடுவது வழக்கம். இதே போன்று சிறுவர்கள் பாத்திரங்களில் காவிரி நீரை எடுத்து சிறிய சப்பரத் தட்டிகளில் வைத்து உற்சாகமாக தங்கள் வீடுகளுக்கு காவிரி அன்னை அழைத்துச் செல்வதாக எண்ணி எடுத்துச் செல்வார்கள். 

இதனால் வீடும், விவசாயமும் செழிக்கும் என்பதால் ஆண்டாண்டுகளாக இவ்வாறு வழிபடுவது வழக்கமாக உள்ளது. இப்பண்டிகைக்கான காதோலை கருகமணி, மற்றும் விளாம்பழம், நாவல் பழம், பேரிக்காய், உள்ளிட்ட பழங்கள் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய நாண் போன்றவைகளின் விற்பனை  சூடுபிடித்துள்ளது. இதே போன்று சிறுவர்கள் இழுக்கும் சிறிய சப்பரங்கள் தயாரிக்கும் பணிகள் மூப்பக்கோவில் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. 

இதனை தயாரிக்கும் பணியில் அன்பழகன் என்பவரது குடும்பம் 3 தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளது. கள்ளிப் பலகையை சேகரித்து அறுத்து வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி, சிவர்களைக் கவரும் வண்ணம் இந்த சப்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் கரை புரண்டு பாய்ந்ததால் ஆடிப் பெருக்கு வழக்கத்தை விட வெகு உற்சாகமாகக் கொண்டாப்பட்டது. 

ஆனால் தற்போது காவிரி அன்னை திலகமில்லா முகம் போன்று வறண்டு காணப்படுகிறது. இதனால் நாளை  (03-.08.-2019-சனிக்கிழமை ) கொண்டாடப்பட உள்ள ஆடிப் பெருக்கு பண்டிகையின் போது வழக்கமான உற்சாகம் இருக்குமா என்பது சந்தேகமே.

 

தலைப்புச்செய்திகள்